புதுடெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக, பாஜ கூட்டணியில் உள்ள சிரோமணி அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவர் தனது கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சிவசேனா, அதிமுக, ஐக்கிய ஜனதா தளம், சிரோமணி அகாலி தளம், லோக் ஜனசக்தி கட்சி, அசாம் கன பரிஷத், அப்னா தளம் (சோனேலால்) உள்ளிட்ட 14 கட்சிகள் இருந்தன. அதில் சிவசேனா கட்சி நடந்து முடிந்த மகாராஷ்டிரா தேர்தல் முடிவில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி, காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் இணைந்து அம்மாநிலத்தில் ஆட்சி நடத்தி வருகிறது. இந்நிலையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தால், நாடு முழுவதும் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு போராட்டங்களை நடத்தி வரும்நிலையில், பாஜ கூட்டணியில் உள்ள கட்சிகளும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கருத்துகளை தெரிவித்து வருகின்றன.
அந்த வகையில், சிரோமணி அகாலிதளம் தலைவர் நரேஷ் குஜ்ரால், தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், கூறியதாவது:
சிரோமணி அகாலி தளம் கட்சி, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரானது. குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் குடியுரிமை பெற விரும்பும் அகதிகள் பட்டியலில் முஸ்லிம்களை சேர்க்க வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி விவாதங்களில், குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற முக்கிய சட்டங்களைக் குறிப்பிடுவது தொடர்பாக விவாதங்கள் நடத்தப்படவில்லை. இவ்வாறு ஆலோசனை நடைபெறாதது துரதிர்ஷ்டவசமானது. இதனால்தான் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பல்வேறு கட்சிகளும் பாஜ மீது அதிருப்தியில் உள்ளன. மக்கள் மன்றத்திலும் ஆளும் பாஜ.வுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.